மத்திய ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களான சிராக் பஸ்வான் மற்றும் ஜித்தன் ராம் மான்ஜி இடையே பட்டியல் சாதியினர் (SC) மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கான (ST) இடஒதுக்கீடு தொடர்பான விவகாரத்தில் கடுமையான கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
எல்.ஜே.பி (ராம் விலாஸ்) கட்சியின் தலைவரான சிராக் பஸ்வான் மற்றும் ஹெச்.ஏ.எம் (எஸ்) கட்சியின் தலைவரான ஜித்தன் ராம் மான்ஜி ஆகிய இரு முக்கிய தலித் தலைவர்களுக்கிடையே வெடித்துள்ள இந்த மோதல், ஆளும் கூட்டணிக்குள் புதிய அரசியல் தலைவலியை உருவாக்கியுள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள இடஒதுக்கீட்டு முறைக்குள் மிகவும் பின்தங்கிய தலித் சமூகத்தினருக்குப் பலன்கள் சென்றடையும் வகையில் உள்-இடஒதுக்கீடு (sub-quota) வழங்க வேண்டும் என ஜித்தன் ராம் மான்ஜியின் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
தலித் பிரிவினருக்கான சலுகைகள் பஸ்வான் மற்றும் ரவிதாஸ் போன்ற ஒருசில குறிப்பிட்ட சமூகங்களால் மட்டுமே அனுபவிக்கப்படுவதாகவும், முஷாஹர் போன்ற மிகவும் விளிம்புநிலை சமூகங்கள் இன்னும் உரிய பிரதிநிதித்துவம் பெறவில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
உச்ச நீதிமன்றம் சமீபத்தில் வழங்கிய தீர்ப்பை மேற்கோள் காட்டி, இடஒதுக்கீட்டில் ‘கிரீமி லேயர்’ கொள்கையை அமுல்படுத்த வேண்டும் என்றும் மான்ஜி தரப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தக் கோரிக்கைக்குக் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் சிராக் பஸ்வான், பொருளாதார அளவுகோல்களின் அடிப்படையில் இடஒதுக்கீட்டைப் பிரிப்பது சமூக நீதியின் அடிப்படை நோக்கத்தையே சிதைத்துவிடும் என்று வாதிடுகிறார்.
மேலும், பட்டியல் சாதியினருக்குள் உள்-இடஒதுக்கீடோ அல்லது ‘கிரீமி லேயர்’ முறையோ தேவை என்று கருதுபவர்கள், முதலில் தங்களிடம் உள்ள இடஒதுக்கீட்டுப் பலன்களைத் துறக்க வேண்டும் என்றும், அதன் முதற்கட்டமாக ஜித்தன் ராம் மான்ஜியும் பீகார் மாநில அமைச்சராக இருக்கும் அவரது மகனும் உடனடியாகத் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அதிரடியாக வலியுறுத்தியுள்ளார்.

