ஈரானின் உச்ச தலைவரான மொஜ்தபா கமெனியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக இஸ்ரேலிய ஊடகமான சேனல் 14 செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலில் ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அவரது மகன் மொஜ்தபா கமெனி புதிய உச்ச தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தாக்குதலின் போதே காயமடைந்ததாகக் கூறப்பட்ட மொஜ்தபா கமெனி, இதுவரை பொதுவெளியில் நேரடியாகத் தோன்றவில்லை. எனினும், அவரது பெயரில் அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் எச்சரிக்கை விடுக்கும் வகையில் தொடர்ச்சியாக அறிக்கைகள் வெளியிடப்பட்டு வந்தன. இந்நிலையில், அவரது ஆரோக்கியம் மிக மோசமான நிலையை எட்டியுள்ளதாகவும், எந்த நேரத்திலும் உயிரிழப்பு நிகழக்கூடும் என்றும் ஈரானின் உயர்மட்ட அதிகாரிகளிடையே தகவல்கள் கசிந்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
தற்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள சூழலில், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியனின் அமைச்சரவைக்கு நெருக்கமான வட்டாரங்கள் மொஜ்தபா கமெனியின் மறைவு குறித்த செய்தி விரைவில் வெளியானால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை எனக் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பே உச்ச தலைவருடன் தொடர்பு கொள்வது கடினமாக இருப்பதாக ஈரான் அதிபர் தெரிவித்திருந்த நிலையில், இந்தத் தகவல் சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

