பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள சில்லிவாக் (Chilliwack) பகுதிக்கு அருகே நடுவானில் இரண்டு சிறிய விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தில், மோதிக்கொண்ட இரு விமானங்களும் ‘செஸ்னா 172’ (Cessna 172) வகையைச் சேர்ந்தவை என அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வோல்ஃப் வீதி (Wolfe Road) மற்றும் இண்டஸ்ட்ரியல் அக்சஸ் வீதிக்கு அருகே உள்ள தொழில்துறைப் பகுதியில் இந்த வான்வெளி விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்தில் சிக்கிய ஒரு விமானத்தில் விமானி மட்டுமே பயணித்துள்ளார்.
மோதிய வேகத்தில் கட்டுப்பாட்டை இழந்த அந்த விமானம், அருகில் இருந்த செயற்கைக் குவாரி நீர்நிலைக்குள் (Quarry lagoon) விழுந்து முற்றிலும் மூழ்கியது.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், தீயணைப்புப் படையினர் மற்றும் மீட்புக் குழுவினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
எனினும், பொலிஸாரின் நீருக்கடி மீட்புக் குழு (Underwater Recovery Team) மேற்கொண்ட சோதனையில், நீரில் மூழ்கிய விமானமும் அதில் பயணித்து உயிரிழந்த ஆண் விமானியின் உடலும் மீட்கப்பட்டன.
அதேவேளை, விபத்தில் சிக்கிய செஸ்னா 172 ரக விமானத்தில் இரண்டு பேர் பயணித்துள்ள நிலையில், விமானியின் திறமையான செயல்பாட்டினால் அது சில்லிவாக் விமான நிலையத்தில் (Chilliwack Airport) பாதுகாப்பாக அவசரத் தரையிறக்கம் செய்யப்பட்டது.
அந்த விமானத்தில் இருந்த இருவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படாமல் உயிர் தப்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இப்பகுதியில் வான் போக்குவரத்து மற்றும் காலநிலை நிலவரங்கள் எவ்வாறு இருந்தன என்பது குறித்தும், இரு விமானங்களும் ஒரே பாதையில் எவ்வாறு மோதிக்கொண்டன என்பது குறித்தும் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

