கனடாவிற்கு விஜயம் செய்த சர்வதேச முக்கிய நபர்களில் (Internationally Protected Persons), பிரிட்டனின் இளவரசர் ஹரிக்கு (Prince Harry) வழங்கப்பட்ட பாதுகாப்பிற்காகவே கடந்த ஐந்து ஆண்டுகளில் மிக அதிகமான நிதி செலவிடப்பட்டுள்ளதாகப் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
கனடாவின் அரச உயர் பாதுகாப்புப் படையான ‘Royal Canadian Mounted Police’ வசம் இருந்து பெறப்பட்ட அதிகாரப்பூர்வ ஆவணங்களை மேற்கோள்காட்டி உள்நாட்டு ஊடகமொன்று இச்செய்தியை வெளியிட்டுள்ளது.
கனடாவின் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட ஆவணங்களின்படி, 2015 முதல் 2020 வரையிலான ஐந்து நிதியாண்டுகளில் இளவரசர் ஹரியின் பாதுகாப்பிற்காகக் கனடிய வரி செலுத்துவோரின் நிதியிலிருந்து குறைந்தபட்சம் 539,575 கனடிய டொலர்கள்
செலவிடப்பட்டுள்ளன.
முன்னதாக 2021 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தரவுகளில் இச்செலவுத் தொகை 334,337 டொலர்கள் எனக் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள முழுமையான ஆவணங்கள் பாதுகாப்புச் செலவீடு அதனை விடப் பெருமளவு அதிகம் என்பதை வெளிப்படுத்தியுள்ளன.
இக்காலப்பகுதியில் உலக நாடுகளின் தலைவர்கள், அரச குடும்பத்தினர் மற்றும் தூதர்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட சர்வதேச முக்கிய நபர்களுக்குப் பாதுகாப்பளிப்பதற்காகக் கனடிய அரசாங்கம் ஒட்டுமொத்தமாகச் செலவிட்ட 5.2 மில்லியன் டொலர்களில், சுமார் 10 சதவீத நிதி இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் மார்க்கிள் (Meghan Markle) ஆகிய இருவரின் பாதுகாப்பிற்காக மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
இத்தொகையானது, 2017/18 ஆம் ஆண்டில் அப்போதைய இளவரசரும் தற்போதைய பிரிட்டன் அரசருமான சார்லஸின் கனடிய விஜயத்திற்குச் செலவிடப்பட்ட 178,584 டொலர்களை விடப் பல மடங்கு அதிகம் என்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது.


