பெல்ஜியத்தில் அமைந்துள்ள நேட்டோ (NATO) இராணுவத் தலைமையகத்தில் உளவு பார்த்த குற்றச்சாட்டின் கீழ் சீன வம்சாவளியைச் சேர்ந்த கனடியப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில், விரிவான விசாரணை நடத்தப்பட்டு உண்மை நிலவரம் கண்டறியப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாட்டின் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி (Gary Anandasangaree) இந்த உறுதி மொழியை அளித்துள்ளார்.
பெல்ஜியத்தின் ‘மொன்ஸ்’ (Mons) நகரில் அமைந்துள்ள நேட்டோவின் ஐரோப்பிய கூட்டுப் படைகளின் உயர்மட்ட இராணுவத் தலைமையகத்தில் (SHAPE) பயிற்சி ஊழியராக (intern) பணியாற்றியவேளையிலேயே குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
மூன்றாம் நாடு ஒன்றிற்காக உளவு பார்த்தமை மற்றும் சர்வதேசக் குற்றவியல் அமைப்பொன்றில் உறுப்பினராக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் பெல்ஜிய கூட்டாட்சி வழக்கறிஞர் அலுவலகத்தால் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதால் கைது செய்யப்பட்ட பெண்ணின் பெயர் விபரங்களை பெல்ஜிய அதிகாரிகள் இதுவரை வெளிப்படுத்தவில்லை.
இந்த நிலையில், பிரிட்டிஷ் கொலம்பியாவின் ‘நியூ வெஸ்ட்மின்ஸ்டர்’ நகரில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் உரையாற்றிய அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி, அந்த சீன வம்சாவளியைச் சேர்ந்த கனடியப் பெண் மீதான குற்றச்சாட்டுகள் “மிகவும் தீவிரமானவை” எனக் குறிப்பிட்டார்.
சந்தேகநபரான அந்தப் பெண் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு முன்னர் கனடாவின் அரச நிறுவனங்கள் அல்லது திணைக்களங்கள் எதிலாவது பணியாற்றியுள்ளாரா என்பது குறித்து, நாட்டின் புலனாய்வு அதிகாரிகள் தீவிரமாக ஆராய்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் இவ்வாறான பாதுகாப்பு மீறல்கள் இடம்பெறுவதைத் தடுக்கும் வகையில் கனடாவின் பாதுகாப்புப் பரிசீலனை (Security Screening) மற்றும் சரிபார்ப்புச் செயன்முறைகள் மீளாய்வு செய்யப்படும் என்றும் அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி சுட்டிக்காட்டினார்.

