கறுப்பு ஜூலை இனப்படுகொலை மற்றும் அதனோடிணைந்து வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் உள்ளிட்ட 53 அரசியல் கைதிகளையும் நினைவுகூறும் நிகழ்வு உணர்வுபூர்வமாக யாழ். வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தலைமைச் செயலகத்தில் இடம்பெற்றது.
தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் பிரதான ஈகைச் சுடரேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து உப தவிசாளர் தர்மலிங்கம் ஜனார்த்தனன் மற்றும் சபை உறுப்பினர்களால் வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, ஜெகன், தங்கத்துரை உள்ளிட்ட அரசியல் கைதிகளின் அடையாளமாக 53 தீபங்கள் ஏற்றப்பட்டு தொடர்ந்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
பிரதேச சபை உறுப்பினரும் முன்னாள் அரச சேவையாளருமான செல்வதிசைநாயகம் தவநாயகம் கறுப்பு ஜூலை தமிழர் வரலாற்றில் மாறாத வடு என்ற தலைப்பில் வரலாற்று உதாரணங்களுடன் அஞ்சலியுரையாற்றினார்.
தொடர்ந்து சபை வளாகத்தில் கறுப்பு ஜூலை கோரத்தாண்டவத்தினை நினைவுகூர்ந்து புகைப்பட தொகுதி காட்சிப்படுத்தலும் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




