கழிவு அகற்றும் உழவு இயந்திர பெட்டியில் உணவு பொருட்களை ஏற்றிச் சென்றதை சுட்டிக்காட்டியதற்கு மட்டு மாநகர சபை முதல்வர் பல விதத்தில் அச்சுறுத்தி வருகின்றனர். எனவே எந்த அச்சுறுத்தலுக்கும் நான் அடிபணிய போவதில்லை இவர்களுக்காக மட்டுமல்ல தமிழ் மக்களுக்கு அநீதி ஏற்படும் போது எனது தந்தை தீபொறி ஆசிரியர் ப.த.அந்தனிசில் ஒடுக்கப்பட்டவர்களுக்காக எவ்வாறு குரல் கொடுத்தாரோ அதே வழியில் எந்த நேரத்திலும் குரல் கொடுப்பேன் என ஈ.பி.டி.பி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்தார்.
மட்டக்களப்பு வொய்ஸ் ஒப் மீடியாவில் இன்று புதன்கிழமை (22) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் ஈ.பி.டி.பி மாவட்ட இணைப்பாளர் சிவானந்தராஜா மற்றும் ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் இவ்வாறு தெரிவித்தனர்.
மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் கதிர்காமம் பாதை யாத்திரை செல்பவர்களுக்கு உணவு வழங்க உணவு பொருட்களை கழிவு அகற்றும் உழவு இயந்திர பெட்டியில் ஏற்றிச் சென்ற சம்பவம் தொடர்பாக ஊடகங்களில் சுட்டிக் காட்டினேன்.
அதற்காக என்னை பழிவாங்க எனக்கு எங்கு காணி இருக்கிறது, வீடு இருக்கிறது, சொத்து இருக்கிறது, என்ன வியாபாரம் செய்கின்றேன் என என்னை அச்சுறுத்தும் வகையில் நேற்று முன்தினம் 20 ம் திகதி மாநகர சபையின் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் எனது வியாபார நிலையத்திற்கு 2 தடவையும் சின்ன உப்போடை எனது வீட்டிற்கும் பாலைமீன்மடுவில் உள்ள எனது தென்னம் தோட்டத்திற்கு சென்று என்னை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டார்கள்.
தவறை சுட்டிக் காட்டியதற்காக என்னை அச்சுறுத்தி வீடு வர்த்தக நிலையங்களின் ஆவணங்களை எடுத்துக்கொண்டு மாநகரசபைக்கு வருமாறு என்னை தொலைபேசி ஊடாக அழைத்தார்கள். அப்போது நான் எழுத்து மூலமாக தருமாறு கோரினால் அதை தருகின்றேன் என்று தெரிவித்தேன்.
அதேவேளை இது ஒரு தவறை சுட்டிக் காட்டியதற்கு என்னை பழிவாங்கும் நோக்கோடு எனது வீடு வர்த்தக நிலையம் உட்பட எனது சொத்துக்கள் இருக்கும் இடங்களுக்கு அன்று காலையில் இருந்து மாலை வரைக்கும் இரு வாகனங்களில் 7 பேர் கொண்ட குழுவினர் தேடி அலைகின்றனர். இதில் என்னை பழிவாங்க மக்களின் வரிப்பணமான 10 ஆயிரம் ரூபாவை எரிபொருளுக்கு செலவு செய்துள்ளனர்.
எத்தனை இடங்களில் வீதி மின்விளக்குகள் இல்லாமல் இருக்கிறது. என்னை பழிவாங்க செலவு செய்த 10 ஆயிரம் ரூபாவுக்கு இந்த வீதி மின்விளக்கு இல்லாததற்கு செலவு செய்திருக்கலாம்.
கல்லடி பாலத்தில் பல தடவைகள் மின்சார விளக்குகள் ஒளிராமல் இருந்துள்ளது இது தொடர்பாக முகநூல்களிலும் தொலைபேசி ஊடாகவும் ஊடகங்கள் ஊடாகவும் மக்கள் மாநகர சபை முதல்வரிடம் பல கோரிக்கைகள் முன்வைத்தும் அதற்கான செயற்பாட்டைச் செய்யாமல் தவறை சுட்டிக் காட்டுபவர்களை பழிவாங்கும் நோக்கோடு தான் மாநகரசபை முதல்வர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து செயற்பட்டுக் கொண்டு இருக்கிறார்
இவ்வாறு தான் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் செய்த தவறை சுட்டிக்காட்டிய ஊடகங்கள் மற்றும் நபர்களுக்கு எதிராகவும் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்துள்ளார் அதேபோன்று இன்று தமிழரசு கட்சி இந்த கொள்கையைத்தான் பின்பற்றி வருகிறது
நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு பிழைகளை சுட்டி காட்டியவர்களை பழிவாங்குகின்றார்களே அவ்வாறே அதற்கு கீழ் உள்ளவர்களும் மக்களை பழிவாங்கும் நோக்கோடு அவர்களுக்கு உரிய அதிகாரங்களையும் ஆளணிகளையும் பயன்படுத்தி மக்களை அச்சுறுத்துகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.



