யாழ்ப்பாண புகையிரத நிலையத்தை ஒரு ‘பல்வகை போக்குவரத்து மையமாக’ அபிவிருத்தி செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் , யாழ்ப்பாண நெடுந்தூர பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து சேவைகளை ஆரம்பிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், நெடுஞ்சாலைகள், போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் புனரமைக்கப்பட்டு வீதியினை மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வினை தொடர்ந்து நடைபெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்
மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணத்தின் ‘நெடுந்தூர பேருந்து நிலையத்தை இயங்க செய்வதில் சில சிக்கல்கள் காணப்படுவதனால், அதனை முறையாக பயன்படுத்த முடியாது உள்ளது.
எனினும், தற்போது நீதிமன்ற உத்தரவொன்று கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில், அனைத்து வகையான பேருந்து சேவைகளையும் அங்கிருந்து தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதனால், இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகளுக்கு இடையே ஒருங்கிணைந்த நேர அட்டவணையை உருவாக்கும் பணி முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அதேவேளை யாழ்ப்பாண புகையிரத நிலையத்தை ஒரு ‘பல்வகை போக்குவரத்து மையமாக’ அபிவிருத்தி செய்யத் திட்டமிட்டுள்ளோம்.
இதன் மூலம் புகையிரதம், பேருந்து மற்றும் முச்சக்கர வண்டி உள்ளிட்ட வாடகை வாகன சேவைகளை ஒரே இடத்தில் ஒருங்கிணைக்க முடியும்.
நகர அபிவிருத்தி என்ற ரீதியில், யாழ்ப்பாண நகரத்தை மேம்படுத்துவதற்காக ஜனாதிபதி யாழ்ப்பாணத்தை ஒரு முக்கிய நகரமாக அடையாளம் கண்டுள்ளார்.
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு, யாழ் மாநகர சபை மற்றும் வட மாகாண சபை ஆகியன இதற்குத் தேவையான முதற்கட்ட உடன்பாடுகளை எங்களுக்கு வழங்கினால், அதற்கு ஏற்ப யாழ்ப்பாண பேருந்து நிலையம் மற்றும் அந்தப் பிராந்தியத்தை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்க முடியும்.
ஏனெனில், ஜனாதிபதி அவர்களின் வாழ்வதற்குகந்த நகரங்கள் திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்படவுள்ள 10 முக்கிய நகரங்களில் யாழ்ப்பாணமும் உள்ளடங்கியுள்ளது என மேலும் தெரிவித்தார்.
