கியூபெக் மாகாணத்தில் ஆளும் CAQ கட்சி அரசாங்கம், தங்களின் நிர்வாகத் தவறுகளையும் நிதி முறைகேடுகளையும் பொதுமக்களுக்கு வெளிப்படுத்துவோரைக் குறிவைத்து, பழிவாங்கல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக, விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.
மாகாண சட்டமன்றத்தில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து, இது தொடர்பில் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன.
கியூபெக் மாகாணத்தின் பொருளாதாரம் மற்றும் மின்கலத் (Battery sector) தொழில்துறையில் ஆளும் CAQ கட்சி அரசு மேற்கொண்ட பில்லியன் கணக்கான டொலர்கள் மதிப்புடைய பொதுப்பண முதலீடுகள், எந்தவித முறையான திட்டமிடலும் இன்றி நஷ்டத்தை நோக்கிச் செல்வதை உள்வாரியாக விமர்சித்து, ஊடகங்களுக்குத் தகவல் வழங்கிய ஒலிவியர் ஸ்மித்-லாசன் (Olivier Smith-Lauzon) என்ற அரசு சிவில் ஊழியர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில், கியூபெக் லிபரல் கட்சிக்கு (PLQ) அனுப்பப்பட்ட மிக ரகசியமான ஆவணம் கசிந்தது தொடர்பாக மாகாணத்தின் நிரந்தர ஊழல் தடுப்புப் பிரிவு (UPAC) விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இதேவேளை, இந்த விவகாரம் கியூபெக் சட்டமன்றத்தில் (National Assembly) வெளிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, மாகாண முதலமைச்சர் கிறிஸ்டின் பிரெச்செட் (Premier Christine Fréchette) மற்றும் அவரது அமைச்சரவைக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டத்தை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


