கியூபெக் மாகாணத்திற்கு என்று பிரத்தியேகமாக ஒரு புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக ஆளும் ‘CAQ’ அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்ட சர்ச்சைக்குரிய ‘Bill 1’, சட்டமன்றத்தில் போதிய ஆதரவு இல்லாததாலும், எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்பினாலும் உத்தியோகபூர்வமாகக் கைவிடப்பட்டுள்ளது.
கியூபெக் சட்டமன்றத்தின் கோடைகாலக் கூட்டத்தொடர் முடிவடைவதற்கு ஒரு நாளுக்கு முன்னதாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடந்த 2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில், கியூபெக்கின் முன்னாள் முதலமைச்சர் பிரான்சுவா லெகோல்ட் (François Legault) தலைமையிலான அரசாங்கத்தால் இந்த மசோதா முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது.
கியூபெக் மாகாணத்தின் சுயாட்சியை (Autonomy) அதிகரிப்பதையும், மாகாணத்தின் முக்கியப் பொது விழுமியங்களைப் பாதுகாப்பதையும் இந்தச் சட்டம் நோக்கமாகக் கொண்டிருந்தது.
கியூபெக் மாகாணத்தின் நீதியமைச்சர் சைமன் ஜோலின்-பாரெட் (Simon Jolin-Barrette) ஊடகவியலாளர்களைச் சந்தித்து, புதிய அரசியலமைப்புச் சட்ட மசோதாவைத் தற்காலிகமாகக் கைவிடுவதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


