கனடாவிற்குள் நுழையும் விமானங்கள் மற்றும் கனடாவை நோக்கிப் பயணிக்கும் சர்வதேச விமானங்களின் சேவைகளில், பாரிய தாமதங்கள் ஏற்பட்டமை தொடர்பான விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன. எல்லைப் பாதுகாப்பு முகவரகத்தின் (CBSA) கணினி வலையமைப்பில் ஏற்பட்ட திடீர் செயலிழப்பு (System Outage) காரணமாகவே, இந்தப் பிரச்சினை ஏற்பட்டதாக, முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
நாட்டில் உள்ள 11 சர்வதேச விமான நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள சுயதேவை பரிசோதனை முனையங்கள் (Inspection Kiosks) முற்றிலும் செயலிழந்ததைத் தொடர்ந்து, இந்த நெருக்கடி நிலை உருவானது.
இந்தத் தொழில்நுட்ப முடக்கம் ஆனது, கனடாவிற்குள் வந்தடைந்த பயணிகளை மட்டுமல்லாது, உலகெங்கிலும் உள்ள பல்வேறு சர்வதேச விமான நிலையங்களில் இருந்து கனடா நோக்கிப் புறப்படவிருந்த பயணிகளையும் கடுமையாகப் பாதித்துள்ளது.
இதன் காரணமாக, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான நிலையங்களில் பல்லாயிரக்கணக்கான பயணிகள் கடுமையான அசௌகரியங்களை எதிர்கொண்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தற்போது, கனடா எல்லைப் பாதுகாப்பு முகமை மற்றும் மத்திய தொழில்நுட்பக் குழுக்கள் இணைந்து, இந்தத் தொழில்நுட்ப முடக்கத்திற்கான மூலக் காரணத்தைக் கண்டறியத் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத் தக்கது.
