கனடாவை மேலும் வலிமையான நாடாக மாற்றுவதற்கு அல்பெர்ட்டா (Alberta) மாகாணம் மிகவும் இன்றியமையாதது என்று, பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) தெரிவித்துள்ளார். அல்பெர்ட்டா மாகாணம் கனடாவை விட்டுப் பிரிவது குறித்து இந்த ஆண்டு ஒக்டோபரில் பொதுமக்களிடம் கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று, அந்த மாகாணத்தின் முதல்வர் டேனியல் ஸ்மித் அறிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து, நாட்டின் ஒருமைப்பாட்டை வலியுறுத்தியே, பிரதமர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். அண்மைய வர்த்தக உடன்பாடுகள் மற்றும் ஒத்துழைப்புகள் மூலம் அல்பெர்ட்டா மக்களின் தேவைகளை மத்திய அரசு நிறைவேற்றி வருவதாகத் தெரிவித்த பிரதமர் மார்க் கார்னி, எனவே அல்பெர்ட்டா மாகாணம் பிரிந்து செல்வதற்கான அவசியம் இல்லை என்று சுட்டிக்காட்டினார்.
ஈரான் பிராந்திய மோதல்களால் உலகளவில் ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடியை (Energy Crisis) நிவர்த்தி செய்வதற்கு, அல்பெர்ட்டாவின் எண்ணெய் வளம் கனடாவுக்கு மிகவும் தேவைப்படுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
இதேவேளை, கனடாவிலிருந்து அல்பேர்ட்டா பிரிந்து தனி நாடாகுவதைத் தடுப்பதற்காக, பிரதமர் கார்னி சுற்றுச்சூழல் விதிகளில் பல சலுகைகளை அந்த மாகாணத்துக்கு வழங்கியிருக்கின்றமை, அவரது சொந்தக் கட்சிக்குள்ளேயே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஆளும் லிபரல் கட்சியின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த விவகாரம் தொடர்பில் பிரதமருக்கு விசேட கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். அல்பெர்ட்டாவுடனான ஒப்பந்தத்திற்காகச் சுற்றுச்சூழல் இலக்குகளைக் கைவிடுவது மத்திய அரசாங்கத்தின் நம்பகத்தன்மையைக் கடுமையாகப் பாதிக்கும் என்று அவர்கள் அக்கடிதத்தில், எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
