மேற்காசியவில் நீடித்து வரும் போர் பதற்றத்தைத் தணிப்பதற்காக அமெரிக்காவின் ஆதரவுடன் முன்வைக்கப்பட்ட சமாதான யோசனைகளை ஈரான் நிராகரித்துள்ளது. ஈரானின் இந்தப் பதில் தமக்கு அதிருப்தி அளிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் மத்தியஸ்தராகச் செயற்படும் பாகிஸ்தான் ஊடாக ஈரான் தனது உத்தியோகபூர்வ பதிலை வொஷிங்டனிடம் கையளித்துள்ளது.
ஈரானின் ‘தஸ்னிம்’ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி,
போர் நிறுத்தத்திற்கு ஈரான் அனைத்து முனைகளிலும் போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும், ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட வேண்டும், அமெரிக்காவின் கடற்படைத் தடைகள் விலக்கப்பட வேண்டும், எதிர்காலத்தில் ஈரான் மீது எவ்விதத் தாக்குதல்களும் நடத்தப்படாது என்பதற்கான உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும் ஆகிய நிபந்தனைகளை முன்வைத்துள்ளது:
ஈரானின் இந்த நிபந்தனைகளைக் கடுமையாகச் சாடியுள்ள ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில், “ஈரானின் பிரதிநிதிகள் எனப்படுவோரின் பதிலை நான் வாசித்தேன். அது எனக்குப் பிடிக்கவில்லை. அது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது எனத் தெரிவித்துள்ளார்.
ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல் மற்றும் லெபனான் மீதான தாக்குதல்களால் மேற்காசியாப் போர்க்களமாக மாறியுள்ள நிலையில், அமெரிக்கா முன்னெடுத்த இந்தச் சமாதான முயற்சி தோல்வியடைந்துள்ளமை சர்வதேச சமூகத்தினிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. இரு தரப்புக்கும் இடையிலான இந்த முரண்பட்ட நிலைப்பாடுகளால் பிராந்தியத்தில் போர் மேலும் தீவிரமடையக்கூடும் என அஞ்சப்படுகிறது.
