சர்வதேச தொழிலாளர் தினப் பேரணியின் போது, கியூபெக் தொழிலாளர் துறை அமைச்சரின் உருவ பொம்மையைத் தலை துண்டிப்பது போலச் சித்தரித்த செயலுக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனப் பிரதான தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
கடந்த மே தினத்தை முன்னிட்டு மொன்றியலில் நடைபெற்ற பேரணியில், தொழிலாளர் துறை அமைச்சர் ஜீன் போலட் (Jean Boulet) போன்ற உருவ பொம்மையைச் சில போராட்டக்காரர்கள் கில்லட்டின் (Guillotine) இயந்திரத்தைப் பயன்படுத்தித் தலையைத் துண்டிப்பது போலச் சித்தரித்தனர்.
இந்த வன்முறைத் தன்மையுடைய போராட்ட முறை கியூபெக் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், FTQ, CSN உட்பட கியூபெக் மாகாணத்தின் மிகப்பெரிய நான்கு தொழிற்சங்க கூட்டமைப்புகள் இன்று இந்தச் செயலை வன்மையாகக் கண்டித்துள்ளன.
தொழிலாளர் சட்டங்களில் அரசு கொண்டு வந்துள்ள மாற்றங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க இந்தப் பேரணி நடத்தப்பட்டது. ஆனால், இந்தப் பேரணியில் பங்கேற்ற முகமூடி அணிந்த ஒரு குழுவினர், தொழிலாளர் துறை அமைச்சரின் உருவ பொம்மையைத் தெருவில் வைத்துத் தலை துண்டிப்பது போன்ற காட்சியை அரங்கேற்றினர்.
கியூபெக் முதல்வர் கிறிஸ்டின் பிரெச்செட் இந்தச் செயலை ஜனநாயகத்திற்கு எதிரானது மற்றும் வெட்கக்கேடானதுஎன்று சாடியுள்ளார்.சமூக வலைதளங்களில் இந்த வீடியோ பரவலடைந்ததைத் தொடர்ந்து, மொன்றியல் பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிராக வன்முறையைத் தூண்டுவது மற்றும்
மிரட்டல் விடுப்பது போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் இந்தப் போராட்டக்காரர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.


