கனடா மற்றும் சீனாவுக்கிடையிலான நேரடி விமானச் சேவைகளின் எண்ணிக்கையை படிப்படியாக அதிகரிப்பதற்கான புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை மத்திய போக்குவரத்து அமைச்சர் ஸ்டீவன் மெக்கின்னன் இன்று அறிவித்துள்ளார்.
பிரதமர் மார்க் கார்னி இந்த ஆண்டின் தொடக்கத்தில் மேற்கொண்ட பீஜிங் பயணத்தின் தொடர்ச்சியாக, இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவை வலுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இரு நாட்டு விமான நிறுவனங்களும் பயணிகள் மற்றும் சரக்கு விமானச்சேவைகளை அதிகரித்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எந்தத் தடையுமின்றி கனடாவிலிருந்து சீனாவுக்கும் சீனாவிலிருந்து கனடாவுக்குமான நேரடிப் பயணங்களை மேற்கொள்ளும் வகையில் பயணிகள் விமானங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையில் வாரத்திற்கு 20 சரக்கு விமானங்களை இயக்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான விநியோகச் சங்கிலி (Supply Chain) பலப்படுத்தப்படும்.
சீனாவுக்கான கனடிய ஏற்றுமதியை 2030 ஆம் ஆண்டிற்குள் 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்பதே மத்திய அரசின் முக்கிய இலக்காக உள்ளது. கடந்த 2025 ஆம் ஆண்டில் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் 124.8 பில்லியன் டொலரை எட்டியிருந்தது. இதன் மூலம் கனடாவின் இரண்டாவது பெரிய வர்த்தகப் பங்காளராக சீனா திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.
