கியூபெக் மாகாணத்தில் பெய்த கடும் பனிமழை (Ice Storm) காரணமாக 2,15,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மின்சாரமின்றித் தவித்து வருகின்றனர். மரங்கள் முறிந்து விழுந்ததாலும், மின் கம்பிகள் அறுந்ததாலும் மொன்றியல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இயல்பு வாழ்க்கை முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை நிலவரப்படி, சுமார் 2 இலட்சத்து 15 ஆயிரம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதில் மொன்றியல் நகரில் மட்டும் 32,000-க்கும் மேற்பட்ட இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பனிக்கட்டிகளின் எடையால் அறுந்து விழுந்த மின் இணைப்புகளைச் சீரமைக்க 1,100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.
இன்று இரவு 11 மணிக்குள் 95 சதவீத இடங்களுக்கு மின்சாரம் வழங்கப்படும் என கியூபெக் மாகாண முதல்வர் பிரான்சுவா லெகோ (François Legault) உறுதியளித்துள்ளார். பனிமழையின் தீவிரம் காரணமாக லெஸ்டர் பி. பியர்சன் (Lester B. Pearson) பாடசாலை சபை இன்று முழுமையாக மூடப்பட்டது.
மற்ற சில பாடசாலை சபைகள் திறக்கப்பட்டாலும், மின்சாரம் இல்லாத பல பாடசாலைகளுக்கு உள்ளூர் ரீதியாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சாலைகள் வழுக்கும் தன்மையுடன் (Slippery) காணப்படுவதால் மாணவர்களின் பாதுகாப்பைக் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மொன்றியலின் ரெம் (REM) ரயில் சேவை இன்று காலை பனிமழை காரணமாகத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, பின்னர் சீரமைக்கப்பட்டது. இதற்கிடையில், லோங்குவேல் (Longueuil) பகுதியில் 80 வயது முதியவர் ஒருவர் அறுந்து விழுந்த மின்கம்பியில் சிக்கி பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வரவேண்டாம் என்றும், விழுந்து கிடக்கும் மின் கம்பிகளுக்கு அருகில் செல்ல வேண்டாம் என்றும் அவசர கால சேவையினர் எச்சரித்துள்ளனர். வானிலை எச்சரிக்கைகள் விலக்கிக்கொள்ளப்பட்டாலும், இன்று மாலை வெப்பநிலை மைனஸ் 2 டிகிரி செல்சியஸாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் சாலைகளில் தேங்கியுள்ள நீர் மீண்டும் பனிக்கட்டியாக மாற வாய்ப்புள்ளதால், வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.எதிர் வரும் திங்கட்கிழமை வரை கடும் குளிர் நீடிக்கும் என்பதால், பனிக்கட்டிகள் முழுமையாக உருகுவதற்கு இன்னும் சில நாட்கள் ஆகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
