கனடாவிடம் இருந்து கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் அணுசக்தி எரிபொருளான யூரேனியத்தைப் பெருமளவில் இறக்குமதி செய்ய இந்தியா சம்மதம் தெரிப்வித்துள்ளது. பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) இந்தியாவுக்கு மேற்கொண்டுள்ள முக்கியப் பயணத்தின் ஒரு பகுதியாக, இந்த வர்த்தக முடிவு எட்டப்பட்டுள்ளது.
கடந்த காலக் கசப்பான உறவுகளை மறந்து, இரு நாடுகளும் பொருளாதார ரீதியாகக் கைகோர்க்கத் தொடங்கியுள்ளன. இந்தியாவின் அணுசக்தித் தேவையைப் பூர்த்தி செய்ய, அடுத்த 10
ஆண்டுகளுக்குச் சுமார் 2.8 பில்லியன் டொலர் மதிப்பிலான யூரேனியத்தை வழங்க கனடா சம்மதித்துள்ளது.
இதற்கான இறுதி ஒப்பந்தம் மார்ச் 2-ஆம் திகதி கையெழுத்தாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதைக் குறைத்துக்கொள்ளத் திட்டமிட்டுள்ள இந்தியா, அதற்கு மாற்றாகக் கனடாவின் கனரகக் கச்சா எண்ணெய்யை (Heavy Crude) வாங்க விருப்பம் தெரிவித்துள்ளது.
மேலும், கனடாவில் குழாய்த்தொடர் (Pipelines) மற்றும் முனையங்கள் அமைப்பதில் முதலீடு செய்யவும் இந்தியா ஆர்வம் காட்டி வருகிறது. தற்போது 30 பில்லியன் டொலராக இருக்கும் இருதரப்பு வர்த்தகத்தை, 2030- ஆம் ஆண்டிற்குள் 70 பில்லியன் டொலராக உயர்த்த இரு நாடுகளும் இலக்கு நிர்ணயித்துள்ளன.
எரிசக்தி மட்டுமின்றி, செயற்கை நுண்ணறிவு (AI), பாதுகாப்புத் துறை மற்றும் கல்வி ஆராய்ச்சி ஆகிய துறைகளிலும் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் எட்டப்படவுள்ளன. பிரதமர் மார்க் கார்னி மற்றும் இந்தியப் பிரதமர் மோடி இடையிலான அதிகாரப்பூர்வப் பேச்சுவார்த்தைகள் மார்ச் 2-ஆம் திகதி டெல்லியில் நடைபெறவுள்ளன.
