நாட்டில் பயங்கரவாதம் இல்லாத சூழலில் இத்தகைய சட்டம் அவசியமற்றது – தேர்தலின் போது வழங்கிய வாக்குறுதிகளுக்கு அமைய, மக்களை ஒடுக்கும் இத்தகைய சட்ட முயற்சிகளை அரசாங்கம் கைவிட வேண்டும்.
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாப்பதற்கான சட்டமூலத்தை நீக்கக்கோரி மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் மன்னார் பஜார் பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை (28) மதியம் தபாலட்டையில் கையொப்பம் சேகரிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டு நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சம் பிகிராடோ தலைமையில் குறித்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது சட்டத்தரணி, சமூக ஆர்வலர்கள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
அதனை தொடர்ந்து ஊடக சந்திப்பு இடம்பெற்றது.
குறித்த ஊடக சந்திப்பில் மெசிடோ நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ மற்றும் சட்டத்தரணி செல்வராசா டினேசன் ஆகியோர் கருத்து தெரிவித்தனர்.
அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
இன்றைய தினம் சமூக செயல்பாட்டாளர்கள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், ஒட்டுமொத்த சமூகம் சேர்ந்து அரசாங்கத்திற்கு ஒரு செய்தியை கொண்டு செல்வதற்காக நாங்கள் தபாலட்டையில் கையொப்பம் சேகரித்தல் மற்றும் இந்த ஊடக சந்திப்பை முன்னெடுத்துள்ளோம்.
அந்த வகையில், உங்களுக்கு தெரியும் தற்பொழுது இலங்கையினுடைய பேசுபொருளாக காணப்படுகின்றது. இலங்கை பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு மாற்றீடான அல்லது பதிலீடான ஒரு சட்டமூலத்தை , அரசாங்கத்தை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாப்பதற்கான சட்டமூலம் தொடர்பாக மக்களுடைய கருத்துக்களை கேட்டறியும் ஒரு செயல்பாடானது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
நாங்கள் மக்களுடன் தொடர்ந்து பயணித்தவர்கள் என்ற அடிப்படையில், இது சம்பந்தமாக மக்களிடம் கொண்டு சேர்த்தவர்கள் என்ற அடிப்படையில், ஒட்டுமொத்த சமூகமும் இந்த பயங்கர வாத சட்டத்திற்கான மாற்றீடான சட்டத்திற்கு முழுமையான எதிர்ப்பை தெரிவிக்கின்றார்கள் என்ற செய்தியை இந்த வேளையிலே நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம்.
ஏனென்று சொன்னால் பயங்கரவாத தடைச் சட்டத்தில் இருக்கின்ற அவ்வளவு அம்சமும் புதிதாக வருகின்ற சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டு இருப்பது, இலங்கையினுடைய அரசியலமைப்பில் அடிப்படை உரிமையை ஒரு பாதிக்கின்ற அல்லது அதற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் இந்த பயங்கரவாத தடைச்சட்டம் அமைந்து காணப்படுகிறது.
ஒரு அரசியலமைப்பிலே ஒரு உறுப்புரையை மாற்ற வேண்டும் என்று சொன்னால் அல்லது அதனுடைய அடிப்படைத் தன்மையை மாற்ற வேண்டும் என்று சொன்னால் சர்வசன வாக்கெடுப்பு நடத்தி அதன் மூலமாகவே அச்சரத்துக்கள் திருத்தப்பட முடியும்.
அப்படி இருக்க, இந்த பயங்கரவாத தடைச் சட்டமானது இலங்கையினுடைய அடிப்படை உரிமையை கேள்விக்குட் படுத்துகின்ற இந்த சட்டமானது, இலங்கையினுடைய பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கொண்டுள்ள இந்த அரசாங்கமானது கொண்டு வருகின்ற சந்தர்ப்பத்திலே, அது மக்களுடைய உணர்வுகளை புண்படுத்தகூடிய வகையில் அமைந்து காணப்படும் என்ற விடயத்தினை நாங்கள் ஆணித்தரமாகச் சொல்ல விரும்புகின்றோம்.
அதுமாத்திரமல்ல, இந்த சர்வதேச ரீதியாகவும் சரி அல்லது சர்வதேச ரீதியிலே அங்கீகரிக்கப்படாத அல்லது தமிழ் மக்கள் மாத்திரமல்ல பெரும்பான்மை மக்களும் எதிர்க்கும் இந்த பயங்கரவாத தடைச் சட்டம் எங்களுடைய இந்த இலங்கை நாட்டிற்கு பொருத்தமில்லை.
ஏனென்று சொன்னால் தற்பொழுது பயங்கரவாதம் இல்லாத ஒரு நாட்டிற்கு ஏன் இந்த பயங்கரவாத சட்டம் என்ற கேள்வியானது அனைவர் மனதிலும் எழுகின்றது.
எனவே இந்த அரசாங்கமானது தேர்தல் வாக்குறுதியில் கொடுத்த அந்த வாக்குறுதிகளை பின்பற்றி, இந்த பயங்கரவாதத்தின் ஊடாக மக்களை அடக்கும் அல்லது ஒடுக்கும் செயல்பாடுகளை நிறுத்த வேண்டும். எனவே இந்த சட்டமூலத்தை நாங்கள் தொடர்ச்சியாக எதிர்க்கின்றோம், தமிழ் மக்கள் எதிர்க்கிறார்கள், தமிழ் சமூகம் எதிர்க்கின்றது என்ற செய்தியை நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம்.”நாட்டில் பயங்கரவாதம் இல்லாத சூழலில் இத்தகைய சட்டம் அவசியமற்றது.
தேர்தலின் போது வழங்கிய வாக்குறுதிகளுக்கு அமைய, மக்களை ஒடுக்கும் இத்தகைய சட்ட முயற்சிகளை அரசாங்கம் கைவிட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
