முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்திப்பதற்காக குருநாகல், கல்கமுவவைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் ஆறு மணி நேர மோட்டார் சைக்கிள் பயணத்தை மேற்கொண்டு இன்று தங்காலைக்கு சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி கொழும்பிலிருந்து தங்காலை – கார்ல்டன் இல்லத்திற்கு சென்றிருப்பதை அறிந்ததும், அவர் மீதான தங்கள் பாசத்தின் காரணமாக இந்த பயணத்தை மேற்கொள்ள முடிவு செய்ததாக குறித்த தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.
பின்னர் அவர்கள் மகிந்த ராஜபக்சவை சந்தித்து சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
அத்துடன் முன்பள்ளி சிறுவர் பாடசாலையை சேர்ந்த குழுவொன்று அவர்களின் பெற்றோருடன் சேர்ந்து, முன்னாள் ஜனாதிபதியை சந்தித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதன்போது, அவர்கள் மகிந்த ராஜபக்சவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் பாடலொன்றையும் பாடியுள்ளதாகவும் சுட்டிக்காட்ப்பபடுகின்றது.
இதேவேளை தம்புள்ளையைச் சேர்ந்த மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள் சிலர் நேற்றைய தினம் மகிந்த ராஜபக்சவை தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
தாம் எப்போதும் மகிந்த ராஜபக்சவுடன் ஆதரவாக ஒன்றிணைந்து செயற்படவுள்ளதாகக் குறித்த குழுவினர் அவரிடம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
