வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி அமெரிக்கப் படைகளால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள நிலையில், வெனிசுலாவின் தற்போதைய நிலை குறித்து ஜனாதிபதி டிரம்ப் ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
வெனிசுவேலாவில் அடுத்த 30 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த ட்ரம்ப், இப்போதைக்கு தேர்தல் நடத்தப்படமாட்டாது என ட்ரம்ப் தெரிவித்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“முதலில் நாட்டைச் சீரமைக்க வேண்டும். மக்கள் வாக்களிக்கும் நிலையில் தற்போது நாடு இல்லை. நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப இன்னும் காலம் எடுக்கும்,
இதற்கு அதிகளவு பணம் தேவைப்படும். எண்ணெய் நிறுவனங்கள் அந்தப் பணத்தைச் செலவிடும், பின்னர் அரசாங்கம் அல்லது வருமானம் மூலம் அவர்களுக்கு அந்தப் பணம் மீள வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.
மேலும், வெனிசுவேலாவுடன் அமெரிக்கா போரில் ஈடுபடவில்லை எனத் தெரிவித்த ட்ரம்ப், அமெரிக்காவிற்குள் போதைப்பொருட்களைக் கடத்தும் கும்பல்களுக்கு எதிராகவே தாம் போரிடுவதாகக் குறிப்பிட்டார்.
வெனிசுவேலாவின் தற்காலிகப் பொறுப்பைத் தாமே கவனிப்பேன் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த ஜனவரி 3ஆம் திகதி அதிகாலை வெனிசுலா தலைநகர் காரகாஸில் அமெரிக்கப் படைகள் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது, ஜனாதிபதி மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் ஆகியோர் அந்நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டு நியூயோர்க்கிற்கு கொண்டு செல்லப்பட்டனர்.
போதைப்பொருள் பயங்கரவாதம், கொக்கைன் கடத்தல் மற்றும் சட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருந்ததாக மதுரோ மீது அமெரிக்காவில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதனை ஒரு “கடத்தல் நடவடிக்கை” என வெனிசுலா அரசாங்கம் சாடியுள்ளதுடன், சர்வதேச சமூகம் இதைக் கண்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


