கனடாவிலிருந்து கியூபெக் சுதந்திரம் பெற்று தனிநாடாக ஆகுமாயின் அது வளமான நாடாக இருக்காது எனவும் வறுமையடையும் எனவும், கியூபெக் லிபரல் கட்சித் தலைவர் பாப்லோ ரொட்ரிகஸ் எச்சரித்துள்ளார்.
தனிநாடாக ஆகுமானால், கியூபெக்கின் பொருளாதார நிலை தற்போதை நிலை போன்று இருக்காது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
G7 போன்ற நாடுகளின் குழுக்களில் உறுப்பினராக முடியாது எனவும் அனைத்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்தும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த நேரிடும் என்றும் பாப்லோ ரொட்ரிகஸ் கூறினார்.
கியூபெக் மாகாணத்தின் சுதந்திரத்தை வலியுறுத்தி நூற்றுக்கணக்கானோர், பெரும்பாலும் இளைஞர்கள், கடந்த சனிக்கிழமை மொன்றியலின் மையப்பகுதியில் மாபெரும் பேரணியை நடத்தியிருந்தனர்.
‘ஊய் கியூபெக்’ (OUI Québec) போன்ற அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் பேரணியில் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் 1980 மற்றும் 1995 வாக்கெடுப்புகளில் பங்கேற்றவர்களுடன் அணிதிரண்டனர்.
இந்த பேரணி குறித்து கருத்துரைத்த போதே, கியூபெக் லிபரல் கட்சித் தலைவர் பாப்லோ ரொட்ரிகஸ் அந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
