மெக்சிகோவில் பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் புயலால் ஆண்டுதோறும் பாதிப்புகள் ஏற்படுகின்றன. இந்த நிலையில், இந்தாண்டில் பிரிசில்லா, ரேமண்ட் என்ற 2 புயல்கள் ஹிடால்கோ, புபேல்லா, வெராக்ரூஸ் ஆகிய பகுதிகளைத் தாக்கின.
பிரிசில்லா புயலால் கிழக்கு மற்றும் மத்திய மெக்சிகோவின் பல பகுதிகளில் கனமழை பெய்து, வெள்ளநீர் சூழ்ந்தது. வீதிகளில் ஆறுகள் பெருக்கெடுத்து ஓடியதால் பாலங்கள் வெள்ளநீரில் அடித்து செல்லப்பட்டன. மேலும், பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டதுடன், மரங்கள், மின்கம்பங்கள் முறிந்ததால் மின்விநியோகம் தடைப்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
வீதிகள் துண்டிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஹெலிகொப்டர்கள் மூலம் உணவு, தண்ணீர் போன்ற அத்தியாவசிய பொருள்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் புயல், மழை வெள்ளத்தில் இதுவரையில் சுமார் 130 பேர் பலியானதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
