கார் தயாரிப்பு நிறுவனமான ஸ்டெல்லன்டிஸ் (Stellantis), ஒன்டாரியோவின் பிராம்ப்டன் (Brampton) தொழிற்சாலையில் திட்டமிடப்பட்டிருந்த வாகன உற்பத்தியை, அமெரிக்காவிற்கு மாற்றுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, அந்நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.
முன்னதாக செய்துகொண்ட பல பில்லியன் டொலர் மதிப்புள்ள ஒப்பந்தத்தின் கீழ், ஸ்டெல்லன்டிஸ் நிறுவனம் தனது “கடமைகளை நிறைவேற்ற” வேண்டும் என்று கனடாவின் தொழில்துறை அமைச்சர் மேலனி ஜோலி (Mélanie Joly) வெளிப்படையாக வலியுறுத்தியுள்ளார்.
ஜீப் காம்பஸ் (Jeep Compass) வாகன உற்பத்தியை பிராம்ப்டன் தொழிற்சாலையில் இருந்து அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்திற்கு மாற்றுவதற்கான இந்த முடிவு, கனடாவில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வேலைவாய்ப்பைப் கேள்விக்குறியாக்கியுள்ளது.
அமெரிக்காவில் தனது உற்பத்தித் திறனை விரிவுபடுத்துவதற்காக, ஸ்டெல்லன்டிஸ் நிறுவனம் 13 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது.
இந்தநிலையில், ஸ்டெல்லன்டிஸ் நிறுவனம் தனது வாக்குறுதியை நிறைவேற்றத் தவறினால், அது ஒப்பந்த மீறலாகக் கருதப்பட்டு, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மேலனி ஜோலி (Mélanie Joly) எச்சரித்துள்ளார்.
