கனடிய உரிமைகள் மற்றும் சுதந்திரங்களுக்கான சாசனத்தின் ஒரு பகுதியான “Notwithstanding Clause” என்று சொல்லப்படும் தவிர்ப்பு விதி-இன் பயன்பாட்டிற்கு வரம்புகளை விதிக்க முயலும் மத்திய அரசின் சட்டப்பூர்வ மனுவை, உச்ச நீதிமன்றத்திலிருந்து உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று, பிரதமர் மார்க் கார்னிக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.
கியூபெக் உள்ளிட்ட ஐந்து மாகாணங்களின் முதல்வர்கள், இந்த விடயம் தொடர்பில் பிரதமர் மார்க் கார்னிக்கு (Mark Carney) கடுமையான அழுத்தம் கொடுத்துள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்டாரியோ, கியூபெக், ஆல்பர்ட்டா, சஸ்காட்செவன் மற்றும் நோவா ஸ்கோஷியா மாகாணங்களின் முதல்வர்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்து பிரதமர் கார்னிக்கு ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளனர்.
“Notwithstanding Clause” என்று சொல்லப்படும் இந்தத் தவிர்ப்பு விதி தொடர்பான மத்திய அரசின் நிலைப்பாடு, “சாசனத்தை உருவாக்கிய அரசியலமைப்பு ஒப்பந்தத்தை முழுமையாக நிராகரிப்பது” போல் உள்ளதாக, முதல்வர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மக்களாட்சி மற்றும் சமஷ்டியின் (Federalism) அடிப்படைக் கொள்கைகளின் மீது மத்திய அரசின் வாதங்கள், “நேரடித் தாக்குதலை” நடத்துவதாகக் முதல்வர்கள் தாம் அனுப்பிவைத்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
மாகாண சட்டமன்றங்களின் இறையாண்மையை (sovereignty) பலவீனப்படுத்த, மத்திய அரசு முயல்வதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
