கனடாவில் அஞ்சல் மற்றும் பார்சல் விநியோக சேவைகள் தற்போது முடங்கியுள்ளன. 55,000 அஞ்சல் ஊழியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கனேடிய அஞ்சல் ஊழியர் சங்கம் (Canadian Union of Postal Workers – CUPW), வியாழக்கிழமை இரவு நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு திடீரென அழைப்பு விடுத்ததையடுத்தே, இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
கனடா போஸ்ட் நிறுவனத்தில் பெரிய சீர்திருத்தங்களைக் கொண்டு வரப்போவதாக மத்திய அரசு அறிவித்த சில மணி நேரங்களிலேயே இந்தத் திடீர் வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டது.
இந்தச் சீர்திருத்தங்களில், வீடுகளுக்கே சென்று அஞ்சல் வழங்கும் சேவையை நிறுத்துதல் மற்றும் சில கிராமப்புற அஞ்சல் நிலையங்களை மூடுதல் ஆகியவை உள்ளடங்குகின்றன.
அஞ்சல் துறையில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய நிதி இழப்புகளுக்குப் பதிலளிக்கும் விதமாகவே இந்தச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த நாடு தழுவிய வேலைநிறுத்தம் காரணமாக, அஞ்சல்கள் மற்றும் பார்சல்கள் எவையும் செயலாக்கப்படவோ அல்லது விநியோகிக்கப்படவோ மாட்டாது எனவும் புதிய அஞ்சல் மற்றும் பார்சல்கள் ஏதும் ஏற்கப்படவும் மாட்டாது எனவும் கனடா போஸ்ட்நிறுவனம் அறிவித்துள்ளது.
