கனடாவும் மெக்சிகோவும் தங்கள் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த ஒரு புதிய, “விரிவான மூலோபாய கூட்டாண்மை” ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
வர்த்தகப் பாதுகாப்புக் கொள்கைகள் குறித்த நிச்சயமற்ற தன்மைகளைச் சமாளிப்பதற்காகவே இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பிரதமர் மார்க் கார்னியும், மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷெயின்பாமுக்கும் இடையிலான சந்திப்பு மெக்சிகோ சிட்டியில் நடைபெற்றது.
அமெரிக்காவின் வர்த்தகக் கொள்கைகள் குறித்து இரு நாடுகளும் கவலை கொண்டுள்ள நிலையில், இந்த ஒப்பந்தம் முக்கியத்துவம் பெறுகிறது.
குறிப்பாக, அடுத்த ஆண்டு CUSMA எனப்படும் அமெரிக்கா-மெக்சிகோ-கனடா வர்த்தக ஒப்பந்தம் மறுபரிசீலனைக்கு வரவுள்ள சூழலில், இந்த புதிய கூட்டாண்மை ஒப்பந்தமானது, வலுவான ஒரு சமிக்ஞையை அனுப்புகிறது.
மெக்சிகோ நகரத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க தேசிய அரண்மனையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், பிரதமர் மார்க் கார்னி இந்த புதிய ஒப்பந்தம் குறித்து கருத்துரைத்தார்.
கனடாவுக்கும் மெக்சிகோவுக்கும் இடையில் ஏற்கெனவே வலுவாக உள்ள உறவை இந்த ஒப்பந்தம் மேலும் மேம்படுத்தும் என, அவர் கூறியுள்ளார்.
அவரைத் தொடர்ந்து உரையாற்றிய மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷெயின்பாம், ”எதிர்கொள்ளும் எந்தவொரு சவாலையும் சமாளிக்க ஒத்துழைப்பு ஒன்றே வழி என்பதை மெக்சிகோவும் கனடாவும் உறுதியாக நம்புகின்றன” என்று தெரிவித்துள்ளார்.
இந்த புதிய கூட்டாண்மை ஒப்பந்தம் மூலம், வர்த்தகம், பாதுகாப்பு, உள்கட்டமைப்பு மேம்பாடு, காலநிலை மாற்ற நடவடிக்கைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட ஒப்புக்கொண்டுள்ளன.
