ஒன்ராறியோ மாகாண கல்வி அமைச்சர் பால் கலந்திரா, பகல்நேர குழந்தை பராமரிப்பு நிலையங்களுக்கு புதிய மற்றும் கடுமையான வாகன நிறுத்துதல் விதிகளை அறிவித்துள்ளார்.
அண்மையில் டொராண்டோ – ரிச்மண்ட் ஹில் பகுதியில் பகல்நேர குழந்தை பராமரிப்பு நிலையத்தில் நிகழ்ந்த விபத்தில் ஒரு குழந்தை உயிரிழந்ததையடுத்தே, இந்த விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த விதிமுறைகளின் முக்கிய நோக்கம் குழந்தைகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதாகும்.
புதிய விதிகளின்படி, பராமரிப்பு நிலையங்களின் நுழைவாயில்கள், விளையாட்டு மைதானங்கள், ஜன்னல்கள் மற்றும் வகுப்பறைகளின் வெளிப்புறச் சுவர்களுக்கு அருகில் உள்ள வாகன நிறுத்தும் இடங்கள் உடனடியாக மூடப்பட வேண்டும்.
இந்த இடங்களை தற்காலிகமாக அடைக்க கூம்புகள், அடையாள பலகைகள் அல்லது ஊழியர்களின் வாகனங்களைப் பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், மாற்றுத் திறனாளிகளுக்கான வாகன நிறுத்துதல் இடங்களுக்கு இந்த விதி பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
