செல்வச்சந்நிதி ஆலயத்திற்கு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை வழிபட சென்ற பெண்ணே மாலை ஆலயத்திற்கு பின்புறமாக உள்ள தொண்டமனாற்று கடல்நீரேரியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்
அச்சுவேலி தோப்பு பகுதியை சேர்ந்த இராஜலிங்கம் சுபாஷினி என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண் நேற்றைய தினம் காலை வீட்டில் இருந்து ஆலயத்திற்கு செல்வதாக கூறி சென்ற நிலையில் இரவாகியும் வீடு திரும்பாத நிலையில் , பெண்ணின் பெற்றோர் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய சென்று இருந்தனர்.
அதன் போதே மாலை தொண்டமனாற்று கடல் நீரேரியில் இருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறி புகைப்படங்களை பெற்றோரிடம் காட்டியுள்ளனர்.
அதனை அடுத்து பெற்றோர் சடலமாக மீட்கப்பட்ட பெண் தமது மகளே என அடையாளம் காட்டியுள்ளனர்.
அதேவேளை சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், பரிசோதனை அறிக்கை வெளிவந்த பின்னரே உயிரிழப்புக்கான காரணம் தொடர்பில் கூற முடியும் என தெரிவித்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
