கஹவத்தை, பலன்சூரியகம பகுதியில் அண்மையில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த எட்டு சந்தேக நபர்கள் இன்று பெல்மடுல்ல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
அங்கு நடைபெற்ற அடையாள அணிவகுப்பில் முன்னிலைப்படுத்தப்பட்ட இரு சந்தேகநபர்கள் சாட்சியாளர்களால் அடையாளம் காணப்பட்டனர்.
கஹவத்தை, பலன்சூரியகம பகுதியைச் சேர்ந்த சுரஞ்சன என்ற 22 வயது இளைஞர், கடந்த ஜூன் 30 ஆம் திகதி காவல்துறையினர் என தம்மை அடையாளப்படுத்திய குழுவொன்றினால் கடத்தப்பட்டு, சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு மற்றும் இரத்தினபுரி பிராந்திய குற்றப்பிரிவு நடத்திய விசாரணையின் போது, 6 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதுடன், மேலும் இரண்டு சந்தேக நபர்கள் காவல்நிலையத்தில் சரணடைந்தனர்.
அதன்படி, நிலையத்தில் சரணடைந்த இரண்டு சந்தேக நபர்களும் இன்று அடையாள அணிவகுப்பில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
அதன்போது, குறித்த இருவரும் உயிரிழந்த நபரின் உறவினர்களால் அடையாளம் காணப்பட்டனர்.
இந்தநிலையில், எட்டு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
