ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள வாட்டர்லூ பிராந்தியத்தில் இயங்கி வரும் கோடைக்கால முகாம்களில் பங்கேற்ற குழந்தைகள், அவர்கள் அறியாமலேயே கேமராக்கள் மூலம் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தனியுரிமை மீறல் குறித்து ஒன்டாரியோவின் தனியுரிமை ஆணையர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
பொதுமக்கள் மற்றும் பெற்றோர்களிடையே இது குறித்த கவலைகள் அதிகரித்துள்ளன.
LiveBarn என்ற நிறுவனம் இயக்கி வரும் இந்த கேமராக்கள், பொதுவாக விளையாட்டு நிகழ்வுகளை நேரலையில் ஒளிபரப்பு செய்வதற்காகவே அமைக்கப்பட்டவை.
ஆனால், கோடைக்கால முகாம் நடவடிக்கைகள் நடந்தபோதும் இந்தக் கேமராக்கள் இயங்கியதால், வாட்டர்லூ, கேம்பிரிட்ஜ் மற்றும் கிச்சனர் ஆகிய நகரங்களில் உள்ள குழந்தைகள் அனுமதியின்றி படம்பிடிக்கப் பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து வாட்டர்லூ நகர நிர்வாகமும், கிச்சனர் நகர நிர்வாகமும், ஒன்டாரியோ தகவல் மற்றும் தனியுரிமை ஆணையருக்குத் தகவல் அளித்தன.
“இந்த விடயத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகளைத் தீர்மானிப்பதற்கான தகவல்களைச் சேகரிக்கும் ஆரம்ப கட்டத்தில் உள்ளோம்” என்று தனியுரிமை ஆணையர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
