வடக்கு பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள ரெட் கிறிஸ் சுரங்கத்தில் மூன்று சுரங்கத் தொழிலாளர்கள் நிலத்தடியில் சிக்கிக் கொண்டதாக பிரிட்டிஷ் கொலம்பியா முதல்வர் டேவிட் எபி இன்று உறுதிப்படுத்தியுள்ளார். இந்த தொழிலாளர்கள் காயமடையவில்லை என நம்பப்படுகிறது. அவர்களில் இருவர் பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்தவர்கள் எனவும் ஒருவர் ஒன்டாரியோவைச் சேர்ந்தவர் எனவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் டீஸ் லேக் அருகே, டஹ்ல்தான் தேசிய பிரதேசத்தில் அமைந்துள்ள ரெட் கிறிஸ் சுரங்கத்தில் நடந்துள்ளது. இது ஃபோர்ட் நெல்சனுக்கு மேற்கே சுமார் 420 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. ரெட் கிறிஸ் சுரங்கம் 2015 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் ஒரு திறந்தவெளி செம்பு மற்றும் தங்க சுரங்கமாகும்.
ரெட் கிறிஸ் சுரங்கத்தின் பெரும்பான்மை உரிமையாளரும், இயக்கும் நிறுவனமுமான நியூமாண்ட் கார்ப் (Newmont Corp.) இன் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையின்படி, செவ்வாய்க்கிழமை காலை நிலத்தடி வேலைப் பகுதிக்குச் செல்லும் பாதையில் "நிலச்சரிவு சம்பவங்கள் இரண்டு முறை நிகழ்ந்துள்ளன.
ஆரம்ப நிலச்சரிவு நடந்தபோது, மூன்று சுரங்கத் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்ட பகுதிக்கு 500 மீட்டருக்கும் அப்பால் வேலை செய்து கொண்டிருந்தனர்.
அவர்கள் உடனடியாக ஒரு குறிப்பிட்ட அடைக்கலம் புகும் இடத்திற்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். அதன் பிறகு ஏற்பட்ட அடுத்த நிலச்சரிவு, அவர்கள் வெளியேறும் பாதையை முழுமையாக அடைத்துவிட்டது எனத் தெரிய வருகின்றது.
