இரண்டு நாட்கள் நடைபெற்ற கனடாவின் மாகாண மற்றும் பிராந்திய முதல்வர்கள் மாநாடு ஹன்ட்ஸ்வில், ஒன்டாரியோவில் நேற்று நிறைவடைந்தது.
அமெரிக்காவுடனான வர்த்தகப் போருக்கு மத்தியில், உள்நாட்டுப் பிரச்சினைகளான வன்முறைக் குற்றங்கள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் சுகாதாரப் பராமரிப்பு ஆகியன இந்த மாநாட்டில் முக்கியத்துவம் பெற்றன.
தொடர் குற்றவாளிகளுக்குப் பிணை வழங்குவதைத் தடுக்கும் வகையில், மத்திய அரசு பிணை சீர்திருத்த மசோதாவை அறிமுகப்படுத்த வேண்டும் என, மாகாண முதல்வர்கள் ஒருமித்த குரலில் வலியுறுத்தியுள்ளனர்.
மாநாட்டின் நிறைவுச் செய்தியாளர் சந்திப்பில் பேசிய மாகாண முதல்வர்கள், இந்த உள்நாட்டுப் பிரச்சினைகள் வெறும் நிகழ்ச்சி நிரலில் மட்டும் இல்லை என்றும், நாட்டின் எதிர்காலத்தை அச்சுறுத்தும் நெருக்கடியால் மாகாணங்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள ஒற்றுமை, இந்தப் பிரச்சினைகளைக் கையாள்வதை எளிதாக்கியுள்ளது என்றும் தெரிவித்தனர்.
சமூகங்களுக்குள் நச்சுப் பொருட்களைக் கொண்டு வருபவர்களுக்கு குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தும் என சஸ்காட்சவன் மாகாண முதல்வர் ஸ்காட் மோ தெரிவித்தார். இதேவேளை, தொடர் வன்முறைக் குற்றவாளிகளுக்கு பிணை வழங்குவதைத் தடுக்கும் வகையில், மத்திய அரசு நாடாளுமன்றத்தின் இலையுதிர் கூட்டத்தொடரில் சட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என முதல்வர்கள் பிரதமர் மார்க் கார்னேயை வலியுறுத்தினர்.
முந்தைய மத்திய அரசு மாகாணங்களுக்கு நிதி பற்றாக்குறையை ஏற்படுத்தியது என்றும், ஒன்டாரியோவுக்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கும், பணியமர்த்துவதற்கும் அதிக நிதி தேவை என்றும் ஒன்டாரியோ முதல்வர் ஃபோர்ட் கூறினார். இந்த மாநாட்டு முடிவுகள், கனடாவின் உள்நாட்டுப் பிரச்சினைகளுக்குத்
தீர்வு காண்பதில் முதல்வர்கள் ஒருமித்த கருத்துடன் இருப்பதையும், தாம் கனேடிய மத்திய அரசுடன் இணைந்து செயல்பட விரும்புவதையும்
தெளிவாகக் காட்டுகின்றன என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
