அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் 35% வரி விதிக்கப்போவதாக அச்சுறுத்தியுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக ஒப்பந்தம் குறித்து ஜூலை 21-க்குள் ஒரு தீர்வை எட்டுவதற்கான பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், டிரம்ப்பின் அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி அன்றிலிருந்து, இந்த புதிய வரி விதிப்பு அமலுக்கு வரும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
கனடா அதற்கு பதிலடி கொடுத்தால், வரிகளை மேலும் அதிகரிப்பேன் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தனது சமூக ஊடக தளமான ‘ட்ரூத் சோஷியல்’ இல் கனடா பிரதமர் மார்க் கார்னிக்கு அனுப்பிய கடிதத்தை டிரம்ப் வெளியிட்டார்.
அதேவேளை, “கனடாவோ அல்லது கனேடிய நிறுவனங்களோ அமெரிக்காவிற்குள் பொருட்களை உற்பத்தி செய்ய முடிவு செய்தால், இந்த வரி விதிக்கப்படாது” என்று டிரம்ப் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
டிரம்ப்பின் கடிதம் கிடைத்ததை பிரதமர் கார்னியின் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.
கார்னியின் குழு தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும், கனடாவை வலுப்படுத்தவும் அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றவும் கனடா உறுதிபூண்டுள்ளது என்று அந்த அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கனடாவின் உருக்கிரும்பு, அலுமினியம் மற்றும் வாகனங்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள இறக்குமதி வரிகள் கனடாவின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளன.
இதனால் வேலை இழப்புகள் மற்றும் ஏற்றுமதியில் சரிவு ஏற்பட்டுள்ளது.