நாடு முழுவதும் பதிவாகியுள்ள மின்சார தடைகள் குறித்து இலங்கை மின்சார சபை அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இன்று (01) பிற்பகல் 5 மணிவரை நாடு முழுவதும் 70,012 மின்சார தடைகள் பதிவாகியுள்ளதாக இலங்கை மின்சார சபைத் தெரிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர், பொறியாளர் தம்மிக்க விமலரத்ன இதனை தெரிவித்துள்ளார்.
இவற்றில், 41,684 மின்சார தடைகள் சரிசெய்யப்பட்டு மின் விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மீதியாக உள்ள மின்சார தடைகளை விரைவாக சீர்செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதற்காக மேலதிக குழுக்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
