நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சர் அனுர கருணாதிலக இன்றைய தினம் (28) முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டதுடன் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை திறந்துவைத்துள்ளார்.
இதில் நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் கொக்குத்தொடுவாயில் நிர்மாணிக்கப்பட்ட குடிநீர் விநியோக நிலையத்தினை காலை 11.00 மணியளவில் திறந்துவைத்ததுடன் மக்களுக்கான குடிநீர் விநியோகத்தினை சம்பிரதாயபூர்வமாக மக்களிடம் வழங்கி வைத்தார்.
குறித்த குடிநீர் திட்ட வேலைத்திட்டமானது 2023 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதுடன் தற்போது அனைத்துப் பணிகளும் நிறைவடைந்தது.
இந்தக் குடிநீர்த் திட்டமானது கொக்கிளாய், கருநாட்டுக்கேணி, கொக்குத்தொடுவாய் ஆகிய பகுதிகளில் வசிக்கும் 1250 குடும்பங்களுக்கு வழங்கக்கூடியதுடன் திட்டத்தின் ஆரம்பத்தில் 250 குடும்பங்களுக்கு இலவசமாக வழங்கும் நடைமுறையில் இன்றைய தினம் நான்கு குடும்பங்களுக்கு குடிநீர் விநியோகம் வழங்கப்பட்டது.
இந்த திறப்பு விழாவில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலகநாதன், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமா மகேஸ்வரன், நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் எம்.எம்.நஷிமுதீன்,தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிராந்திய பொறியியலாளர், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர், கிராம அலுவலகர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
