கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைமைச்சர் சிவநேசதுரை
சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான், உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை
உரிமைகள் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் கடத்தப்பட்டு கொலை
செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ்
தன்னைக் கைது செய்து தடுத்து வைப்பதற்கு, குற்றப் புலனாய்வுத் துறை
எடுத்த முடிவானது, தனது அடிப்படை உரிமைகளை மீறுவதாக
தீர்ப்பளிக்கக் கோரி, இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவின்
பொறுப்பதிகாரி மாதவ குணவர்தன, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின்
பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இமேஷா முத்துமால, பதில்
பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, பாதுகாப்பு அமைச்சர் மற்றும்
சட்டமா அதிபர் ஆகியோர் இம்மனுவில் பிரதிவாதிகளாக
பெயரிடப்பட்டுள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி, தனது கட்சியின் நடவடிக்கையில்
ஈடுபட்டிருந்த போது, குற்றப் புலனாய்வுத் துறையை சேர்ந்த அதிகாரிகள்
குழு, மட்டக்களப்பு பகுதியில் தன்னை கைது செய்ததாக, பிள்ளையான்
இம்மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
குற்ற புலனாய்வு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனக்கு நித்திரை
கொள்வதற்கு போதுமான வசதிகள் இல்லை எனவும் பிள்ளையான்,
தெரிவித்துள்ளார்.
மேலும் சட்டத்தரணிகளை அணுகுவதற்கும் போதுமான வசதிகள் தமக்கு
இல்லை எனவும் பிள்ளையான் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளதாகத்
தெரிவிக்கப்படுகிறது.
மேலும் தமக்கு நஷ்ட ஈடாக 100 மில்லியன் இலங்கை ரூபாய்களைப்
பெற்றுத் தர வேண்டுமெனவும் அவர் கோரியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
