டொராண்டோ காவல்துறை அதிகாரிகளுடன் நடந்த துப்பாக்கிப் பிரயோகத்தில், காயமடைந்த 16 வயது சிறுவன் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளதாக தகவல்
வெளியாகியுள்ளது.
ஒன்டாரியோவின் சிறப்பு புலனாய்வுப் பிரிவு இத்தகவலை வெளியிட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு வடக்கு யோர்க் பகுதியில் போக்குவரத்து நிறுத்தத்தின்போதே,
இந்த துப்பாக்கிச் சண்டை இடம்பெற்றுள்ளது. ஷெப்பர்ட் அவென்யூ மேற்கு மற்றும் பாத்தர்ஸ்ட் வீதிக்கு அருகில் இரவு 11 மணியளவில் போக்குவரத்து மீறலை அவதானித்த காவல்துறையினர் ஒரு காரை நிறுத்தியதாகத் தெரியவருகின்றது.
அதன் போது காவல்துறையினர் மீது முதலில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதனையடுத்து, காவல்துறையினர் தாமும் துப்பாக்கிச்சூட்டினை மேற்கொண்டனர்.
இதன்போதே 16 வயது சிறுவன் காயமடைந்தார்.உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுசென்று சிகிச்சைகள் அளிக்கப்பட்ட போதும், சிகிச்சை ப் பலனின்றி அந்த சிறுவன் உயிரிழந்துள்ளார். சம்பவ இடத்தில் ஒரு துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டதாகவும், வீடியோ ஆதாரங்களின்படி அந்த 16 வயது சிறுவனே முதலில் காவல்துறை அதிகாரிகளை நோக்கிச் சுட்டதாகவும் ஒன்டாரியோவின் சிறப்பு புலனாய்வுப் பிரிவு கூறுகின்றது. அதன் பின்னரே காவல்துறை அதிகாரிகள் பதில் தாக்குதலை மேற்கொண்டனர் எனவும்
ஒன்டாரியோவின் சிறப்பு புலனாய்வுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
