கனடாவில் நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலுக்கான முன்கூட்டிய வாக்களிப்பு நாளை வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. ஏப்ரல் 28ஆம் திகதி நடைபெறும் அதிகாரப்பூர்வ தேர்தலுக்கு முன்னதாக வாக்களிப்பதற்கான வாய்ப்பு, இதன் மூலம் வழங்கப்படுகின்றது.
வாக்கினைச் செலுத்துவதற்கான நீண்ட வரிசைகளைத் தவிர்க்க, காலை நேரத்திலோ அல்லது மாலை 4 மணிக்குப் பிறகோ வாக்களிக்கலாம் என்று கனடா தேர்தல்
திணைக்களம் அறிவுறுத்துகிறது. காலை 10 மணி முதல் நண்பகல் வரையிலும், மீண்டும் மதியம் 1 மணி முதல் மாலை 4 மணி வரையிலும், வாக்களிப்பதற்காக அதிக கூட்டம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்கூட்டிய வாக்களிப்பு நாட்களில் வாக்குச் சாவடிகள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். வாக்குப்பதிவு நேரம் முடியும் போதும் வரிசையில் இருப்பவர்கள் அனைவரும் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை முதல் முறையாக வாக்களிக்கவுள்ள நபர்கள், ஏப்ரல் 22ஆம் திகதிக்குள் இணையவழி வாக்காளர் பதிவு சேவை மூலமாகவோ அல்லது உள்ளூர் கனடா தேர்தல் அலுவலகத்தில் நேரில் சென்றோ, தம்மைப் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
