இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கு முன்னர் மீனவ பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவுனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை சிறைகளில் வாடும் தமிழக மீனவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியப் பிரதமரின் கொழும்பு பயணத்தின் போது இந்திய – இலங்கை கடல் பகுதியில் இரு நாட்டு மீனவர்களும் மீன் பிடிப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்படுவதையும் இந்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 133 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 18 படகுகள்
பறிமுதல் செய்யப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அவர் இந்த கைது நடவடிக்கை மீனவர்களிடையே பெரும் அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.