புதுக்குடியிருப்பு மன்னாகண்டல் பகுதியில் 400 ஏக்கருக்கு மேற்பட்ட ஏக்கர் வயல் நிலங்கள் அழிவு! அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என விவசாயிகள் விசனம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு கமநல சேவை நிலையத்துக்கு உட்பட்ட மன்னாகண்டல் கமக்கார அமைப்புக்குட்பட்ட பகுதியில் இவ்வாண்டு 1400 ஏக்கரில் காலபோக நெற்செய்கை செய்யப்பட்டிருந்தது
இந்நிலையில் வயல் அறுவடைக்கு தயாரான நிலையில் அண்மை நாட்களாக பெய்த கனமழை காரணமாக சுமார் 400 ஏக்கர் வயல் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கி அழிவடைந்துள்ளன.
இந்நிலையில் பல்வேறு கடன்களை பெற்று நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் தாங்கள் மருந்து குடித்து சாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அங்கலாய்க்கின்றனர்.
மழை வெள்ளத்தால் வயல்கள் அழிவடைந்து பல தரப்புக்களுக்கும் அறிவித்து இதுவரை யாரும் வருகை தந்து வயல் நிலங்களை பார்வையிட கூட இல்லை என்று கவலை வெளியிட்டுள்ளனர்.
கடந்த போகத்திலும் காப்புறுதி செய்தும் அழிவடைந்த வயல் நிலங்கள் உரிய வகையில் பார்வையிடவோ இழப்பீடு வழங்கபபடவோ இல்லை எனவும் இம்முறையும் இதுவரை எந்த அதிகாரிகளும் வருகை தந்து பார்வையிடவில்லை எனவும் அரசாங்கம் உடனடியாக எமது நிலமைகளை கருத்தில் கொண்டு இழப்பீடுகளை வழங்க முன்வரவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்