பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்துச் சேவை நடாத்தும் இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் சிற்றூர்தி உரிமையாளர்களுடனான கலந்துரையாடலானது யாழ் . மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் பாடசாலை மாணவர்களின் போக்குவரத்துச் சேவைகளில் ஏற்படும் தடங்கல்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டு சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
அவனையாவன, கொழும்புத்துறையிலிருந்து யாழ்ப்பாண நகருக்கு வரும் பாடசாலை மாணவர்களுக்கான இலங்கைப் போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் சிற்றூர்தியின் நேர ஒழுங்குகள் சீர் செய்தல்.
மருதங்கேணி கட்டைக்காட்டிலிருந்து உடுத்துறைக்கு வரும் பாடசாலை மாணவர்களுக்கான இலங்கைப் போக்குவரத்து சபையின் பேரூந்துச் சேவை மற்றும் உசன் கெற்பெலி பகுதிகளிலிருந்து சாவகச்சேரி நகருக்கு வரும் பாடசாலை மாணவர்களுக்கான இலங்கைப் போக்குவரத்து சபையின் பேரூந்துச் சேவைகள் தொடர்பாக பாடசாலை மாணவர்களின் பாடசாலை நேரத்திற்கு அமைவாக நேர ஒழுங்குகள் சீர்செய்தல்.
அச்சுவேலி இராசபாதை ஊடாக யாழ்ப்பாண நகருக்கு வரும் இலங்கை போக்குவரத்துச் சபையின் பேரூந்தில் பாடசாலை மாணவர்களுக்கான இடையூறு ஏற்படாதவகையில் பேரூந்து சேவை நடைபெறுவதனை சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்களைக் கொண்டு உறுதிசெய்தல் ஆகிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
இக் கலந்துரையாடலில் உதவி மாவட்டச் செயலாளர், இலங்கை போக்குவரத்துச் சபையின் முகாமையாளர் மற்றும் சாலை முகாமையாளர், தனியார் சிற்றூர்தியின் சங்கத் தலைவர் மற்றும் உரிமையாளர்கள், சிறுவர் மேம்பாட்டு மாவட்ட இணைப்பாளர் மற்றும் பிரதேச செயலக சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.