அண்மையில் மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும் வாழ்நாள் போராளியுமான தோழர் இரா. நல்லகண்ணு அவர்களை நினைவுகூரும் நினைவேந்தல் நிகழ்வுகள் 15.03.2025 ஞாயிற்றுக் கிழமை மாலை 3.30 மணிக்கு இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள திவ்ய ஜீவன சங்க மண்டபத்தில் இடம்பெற்றது.
தமிழ்த் தேசிய பசுமை இயக்கம் மற்றும் தமிழ்த் தேசியப் பேரவையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் முதலாவதாக தோழர் நல்லகண்ணு அவர்களை நினைவுகூர்ந்து சுடரேற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றது. அரசியல் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் திரண்டு தோழர் நல்லகண்ணு அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
அதனை தொடர்ந்து தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவரும், முன்னாள் வடமாகாணசபையின் விவசாய அமைச்சருமான பொ. ஐங்கரநேசன் அவர்களின் தலைமை உரையினை தொடர்ந்து, ஆசிரியம் சஞ்சிகையின் ஆசிரியரும், சமூக செயற்பாட்டாளருமான தெ. மதுசூதனன் அவர்களின் சிறப்புரையும், அதனைத் தொடர்ந்து அரசியல் ஆய்வாளர் ம. நிலாந்தனின் உரையும், தொடர்ந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செ. கஜேந்திரன் அவர்களின் உரையும் இடம்பெற்றது.
தோழர் நல்லகண்ணு அவர்கள் ஈழத்தமிழ் மக்கள் மீதான பற்று, பிரித்தானிய காலனியாதிக்கத்துக்கு எதிராக போராடியமை, வாழ்நாள் முழுவதும் பொதுவுடமைப் போராளியாக செயற்பட்டமை, விவசாயிகளுக்கு ஆதரவாக எப்போதும் களத்தில் நின்றமை, சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கு ஆதரவாகவும், கனிம வளக் கொள்ளைகளுக்கு எதிராகவும் மக்களோடு நின்று துணிச்சலாக போராடியமை, அவரது எளிமையும், உண்மையும் போன்ற பல்வேறு விடயங்களையும் பேச்சாளர்கள் தங்களது பேச்சுக்களில் வெளிக்கொணர்ந்திருந்தனர்.
தோழர் நல்லகண்ணு அவர்களை நினைவு கூர்ந்த ஈழத்தின் முதலாவது நிகழ்வு இதுவாகும்.
