ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 26 ஆம் திகதி டெல்வின்ராஜ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற, டெல்வின் ராஜ், வெள்ளைச்சாமி, சுரேஷ், எமரிட் ஆகிய நான்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்று மறுநாள் செவ்வாய்க்கிழமை மீன் பிடித்து விட்டு கரை திரும்பிய போது சூறைக்காற்று காரணமாக நடுக்கடலில் படகு மூழ்கி விபத்துக்குள்ளானது.
அப்போது மூழ்கிய படகில் இருந்து டெல்வின் ராஜ், சுரேஷ் ஆகிய இரண்டு மீனவர்கள் நீந்தி இலங்கை கடற்படையினரின் உதவியால் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டு விமானம் மூலம் தாயகம் திரும்பி உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மாயமான மீனவர்கள் எமரிட் மற்றும் வெள்ளைச்சாமி ஆகிய இருவரை ராமேஸ்வரம் மீன்வளத்துறை அதிகாரிகள் அனுமதியோடு சக மீனவர்கள் இரண்டு நாட்களாக தேடி வந்த நிலையில் நேற்று புதன் (29) மாலை நடுக்கடலில் மாயமான மீனவர் எமரிட் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உடலை கைப்பற்றிய மீனவர்கள் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திற்கு உடலை எடுத்து வந்து சேர்த்தனர். இதையடுத்து உடற்கூற்று பரிசோதனைக்காக ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்து குறித்து மரைன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் நடுக்கடலில் மாயமான வெள்ளைச்சாமி என்ற மீனவரை அரசு தேடித் தரும்படி கோரிக்கை விடுத்துள்ள உறவினர்கள் இறந்த மீனவர் எமரிட் குடும்பத்திற்கு அரசு நிவாரண தொகை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.