கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான், அடுத்துவரும் 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து
விசாரிக்கப்படவுள்ளதாக இலங்கை காவல்துறை அறிவித்துள்ளது.
மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து நேற்ற முன்தினம் இரவு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் சிவநேசதுரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழேயே, இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சிவநேசதுரை சந்திரகாந்தன், இன்று காலை, கொழும்பில் அமைந்துள்ள இலங்கையின் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தரான பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பிலேயே, இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பேராசிரியர் சிவசுப்ரமணியம் ரவீந்திரநாத் 2006-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்குபற்றிய போது கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
