தமிழர் பண்பாட்டின் உன்னத அடையாளமாக விளங்கும் மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலின் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா கோலாகலமாக நடைபெறவுள்ள நிலையில், முதலமைச்சர் விஜய் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், 17 ஆண்டுகளுக்குப் பிறகு இத்திருக்கோயிலின் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா சிறப்புடன் நடைபெறுவது பெருமகிழ்ச்சி அளிப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழர்களின் ஆன்மிகம், கலை, பண்பாடு, கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலையின் பெருமைகளை நூற்றாண்டுகளைக் கடந்து பறைசாற்றி நிற்கும் இத்திருக்கோயிலின் குடமுழுக்கு விழாவால், இறைவனின் திருவருள் அனைவரது வாழ்விலும் நிறைந்து நலமும் வளமும் மகிழ்ச்சியும் பெருகட்டும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழர் பண்பாட்டின் உன்னத அடையாளத்தை உலகிற்கு உணர்த்தும் வகையிலும், மண்ணின் ஆன்மிக மற்றும் வரலாற்றுப் பாரம்பரியத்தின் பெருமையை எடுத்துரைக்கும் வகையிலும் இந்நன்னாள் அமைகின்றது எனக் குறிப்பிட்டுள்ளார்.
நமது தொன்மையான திருக்கோயில்களையும் அவற்றின் வரலாற்றுச் சிறப்பையும் பாதுகாத்து, ஆன்மிக மற்றும் பண்பாட்டுப் பெருமையை வருங்காலத் தலைமுறைகளுக்கும் எடுத்துச் செல்வோம் என்றும் அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


