கிழக்கு மாகாண மக்களுக்கு நவீன இருதய நோய் சிகிச்சை சேவைகளை வழங்கும் நோக்கில், திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் புதிய இருதய நோய் சிகிச்சைப் பிரிவு கட்டிடத்தின் நிர்மாணப் பணிகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இந்தப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
ஜப்பான் அரசின் நிதியுதவியுடன், ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகவரகமான JICA-வின் சுகாதார மற்றும் மருத்துவ சேவைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
இதற்காக நிர்மாணப் பணிகளுக்கு 2 ஆயிரத்து 403 மில்லியன் ரூபாயும், மருத்துவ உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்கு 1 ஆயிரத்து 782 மில்லியன் ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளன.
மொத்தமாக 4 ஆயிரத்து 185 மில்லியன் ரூபாய் பெறுமதியான இந்தத் திட்டத்தின் கீழ், எட்டு மாடிகளைக் கொண்ட இருதய நோய் சிகிச்சைப் பிரிவு அமைக்கப்படவுள்ளது.
அதிநவீன அறுவைச் சிகிச்சைக்கூடங்கள், வெளிநோயாளர் மற்றும் விடுதி நோயாளர் சிகிச்சை வசதிகள், ஆய்வகங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இதில் ஏற்படுத்தப்படவுள்ளன.
கட்டிட நிர்மாணப் பணிகள் 2028ஆம் ஆண்டு மே மாதத்திற்குள் நிறைவுசெய்ய எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு ஜப்பான் தொடர்ந்து ஆதரவளித்து வருவதாக, இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ இசோமதா தெரிவித்துள்ளார்.
சுகாதார உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளுக்கும் ஜப்பான் தொடர்ந்து ஆதரவளிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


