மொன்றியல் தெற்குப் பகுதியில் (South Shore) 2022-ஆம் ஆண்டு லாரி ஒன்றை ஓட்டிச் சென்றபோது ஏற்படுத்தி தாய் மற்றும் அவரது 11 வயது மகன் உயிரிழக்கக் காரணமான ஓட்டுநர் பல்ஜீத் சிங்கிற்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்குமாறு அரசுத் தரப்பு மற்றும் பிரதிவாதி தரப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் பரிந்துரைத்துள்ளனர்.
2022-ஆம் ஆண்டு ஜூலை மாதம் லோங்கய்ட் (Longueuil) பிராந்தியத்தின் செயிண்ட்-ஹூபர்ட் பகுதிக்கு அருகில் உள்ள நெடுஞ்சாலை 30-இல் (Highway 30) இந்த விபத்து நிகழ்ந்தது.
லாரியை அதிவேகமாக ஓட்டிச் சென்ற அந்த பல்ஜீத் சிங் தனது கைபேசியில் இணையவழி விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்ததாகக் சாட்சியங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
சாலையில் அமைக்கப்பட்டிருந்த வீதிப் பராமரிப்பு மண்டலத்தை (construction zone) நெருங்கியபோது ஓட்டுநர் பல்ஜீத் சிங் லாரியின் வேகத்தைக் குறைக்கத் தவறியதால், அது முன்னால் சென்ற பல வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதிப் பாரிய விபத்தை ஏற்படுத்தியது.
இந்த விபத்தில், 42 வயதான நான்சி லேபிரான்சுவா (Nancy Lefrançois) மற்றும் அவரது 11 வயது மகன் லோயிக் (Loïc) ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், 10 பேர் இந்த விபத்தில் படுகாயமடைந்தனர்.
விபத்து நடந்தவுடனேயே மன உளைச்சலுக்குச் சிகிச்சை பெறுவதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஓட்டுநர் பல்ஜீத் சிங், மறுநாளே அங்கிருந்து தப்பிச் சென்று தலைமறைவானார்.
முதலில் டொராண்டோவிற்குத் தப்பிச் சென்ற அவர், அங்கிருந்து இந்தியா வழியாக அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திற்குத் தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து அவருக்கு எதிராக சர்வதேசக் கைது பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
இறுதியில் 2025-ஆம் ஆண்டு அமெரிக்க அரசினால் கலிபோர்னியாவில் வைத்து அவர் கைது செய்யப்பட்டு கனடாவிற்கு நாடு கடத்தப்பட்டார்.
கைது செய்யப்பட்ட பல்ஜீத் சிங் மீது ஆபத்தான முறையில் வாகனத்தை ஓட்டி மரணத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, அவர் தனது குற்றத்தை நீதிமன்றத்தில் முறைப்படி ஒப்புக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

