உக்ரைனில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கி வரும் உலக சுகாதார அமைப்பின் (WHO) பிரதான மருத்துவக் கிடங்கு மீது ரஷிய படைகள் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளன.
தலைநகர் கீவ் மாகாணத்தில் உள்ள போரிஸ்பில் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த பயோகான் தளவாட வளாகம் நேற்றிரவு இலக்கு வைக்கப்பட்டது.
இந்தத் தாக்குதலால் கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டிருந்த நிவாரண மருத்துவப் பொருட்கள் பெருமளவில் சேதமடைந்துள்ளன.
பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டும் அடர்ந்த புகை மூட்டம் காரணமாகவும் கிடங்கிற்குள் அதிகாரிகள் நுழைவது தற்போது தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.
எனினும், தாக்குதல் தொடங்குவதற்கு முன்பே அங்கிருந்த ஊழியர்கள் வெளியேற்றப்பட்டதால் யாருக்கும் காயம் அல்லது உயிரிழப்பு ஏற்படவில்லை என உலக சுகாதார அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கிறிஸ்டியன் லிண்ட்மியர் உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த மூன்று மாதங்களில் உலக சுகாதார அமைப்பு பயன்படுத்தும் மருத்துவக் கிடங்கு மீது ரஷியா நடத்தும் மூன்றாவது தாக்குதல் இதுவாகும்.
முன்னதாக ஆகஸ்ட் மாதத்தில் டுனிப்ரோ பகுதியில் உள்ள கிடங்கும், ஜூலை மாதத்தில் கீவ் பகுதியின் மற்றொரு கிடங்கும் சேதமடைந்தன.
இந்தத் தொடர் தாக்குதல்களால் உக்ரைனின் போர் முனைகளில் உள்ள சுமார் 2.25 லட்சம் மக்களுக்குச் செல்ல வேண்டிய மருத்துவ உதவிகள் பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது.
பாதிக்கப்பட்ட மருந்துகளின் மொத்த மதிப்பீடு செய்யப்பட்டு வரும் நிலையில், மாற்று இடங்களில் மருத்துவ பொருட்களை சேமித்து விநியோகிக்கும் பணிகளை WHO விரைவுபடுத்தியுள்ளது.



