பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள ஜியாரத் மற்றும் சுரப் மாவட்டங்களில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பாகிஸ்தான் ராணுவ வாகனங்களை இலக்கு வைத்து, ஆயுதம் ஏந்திய பலுசிஸ்தான் விடுதலைப் படை அமைப்பினர் பயங்கர தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இந்தத் திடீர் இரட்டைத் தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த 25 வீரர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும், பலர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதலின் தீவிரத்தை வெளிப்படுத்தும் 1 நிமிடம் 11 வினாடிகள் கொண்ட வீடியோ காட்சிகளைப் பலுசிஸ்தான் விடுதலைப் படை வெளியிட்டுள்ளது.
அதில் ராணுவ வாகனங்கள் தீப்பற்றி எரிவதும், அதைச் சுற்றி ஆயுதம் ஏந்திய கிளர்ச்சியாளர்கள் நிற்கும் காட்சிகளும் பதிவாகியுள்ளன.
தங்களது பிராந்தியத்தின் தேசிய விடுதலை இலக்கு நிறைவேறும் வரை பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகள் மீதான தாக்குதல்கள் தொடரும் எனப் பலுசிஸ்தான் விடுதலைப் படை அறிவித்துள்ளது.
கடந்த மாதத்தில் மட்டும் இப்பகுதியில் நடத்தப்பட்ட 36 வெவ்வேறு தாக்குதல்களில் 33 வீரர்கள் கொல்லப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளது பாகிஸ்தான் ராணுவத்திற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.



