நேபாள-திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பனிப்பாறை மற்றும் பாறை சரிவின் காரணமாக போட்டே கோஷி ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த திடீர் வெள்ளம் மற்றும் சேற்றுப் பெருக்கு காரணமாக அப்பகுதியில் உள்ள பல கிராமங்களும் நகரங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
தற்போது இப்பேரிடரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 675-ஆக உயர்ந்துள்ளதாக நேபாள காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும் இடிபாடுகளில் சிக்கியும் 2,400-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட எட்டு மாவட்டங்களில் இதுவரை 675 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக சித்வான் மாவட்டத்தில் 246 உடல்களும், கிழக்கு நவல்ப்பராசியில் 165 உடல்களும், மேற்கு நவல்ப்பராசியில் 63 உடல்களும் மீட்கப்பட்டுள்ளன.
மேலும் கோர்கா, தாடிங், நுவாகோட், தனஹு மற்றும் ரசுவா ஆகிய மாவட்டங்களிலும் பெரும் உயிர்ச்சேதங்கள் பதிவாகியுள்ளன.
பல இடங்களில் நீர்மின் நிலையங்கள் அடித்துச் செல்லப்பட்டும் உட்கட்டமைப்புகள் முற்றிலுமாக சேதமடைந்தும் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வரும் போதிலும், மீட்புக் குழுவினர் காலத்தோடு போட்டியிட்டு தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேசிய பேரிடர் குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையத்தின் தலைமையில் 5,000 ராணுவ வீரர்கள் உட்பட 11,000-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் மீட்புப் பணியில் களம் இறக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை 163 வெளிநாட்டினர் உட்பட சுமார் 2,500 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மீட்கப்பட்டுள்ளனர்.
மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் பகுதிகளில் அனுமதி இன்றி ட்ரோன்களை இயக்கக் கூடாது என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

